Friday, March 23, 2007

அப்துல் ரகுமான் இலக்கியமான்

கவிக்கோ அப்துல் இரகுமான்.

"இரவுக்கு
தாலாட்டு பாடுகின்றனவா
சில்வண்டுகள்?"

இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் அப்துல் இரகுமான்.செல்லமாக கவிக்கோ.மதுரை மண்ணில் முளைத்த கவிவிருட்சம்.பெற்றோரும் கவிஞர்களே,ஆனால் உருது.அதுவும் நல்லதற்குத்தான்,அவர் உருது மொழியின் பலத்தை தமிழில் apply செய்ய அது உதவியது.மெல்லிய பிரெஞ்சு தாடியோடு ஜிப்பா அணிந்த கண்ணாடிக்காரர்.ஒளிபடைத்த கண்ணினார்,மதுரையின் கார்வண்ணத்தை தோலில் கொண்டவர்.கடைசி புத்தகம்:இது சிறகுகளின் நேரம்,இந்த கணநொடி வரை மூச்சுவிடுகிறார்.முப்பது ஆண்டுகளாக கவிதை எழுதிவருகிறார்,பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவருமாவார்.

தமிழ் படிப்பித்த ஆசிரியரான அவர் தமிழில் கஜல் எழுதலானார்.மரபுக்கவிகளை எழுதிக்கொண்டிருந்தவர் மெல்ல புதுக்கவிதைகளுக்கு தடம் மாறினார்.

ஹைக்கூ கவிதைகளை தமிழுக்கு கொண்டுவந்தார்.அதைப்பற்றி அவர் ஜூனியர் விகடனில் எழுதிய கட்டுரை மிகப்பிரபலம்.அதன் தலைப்பு:மின்மினிகள்.இந்நிலையில் அவரது முதல் கவிதைத்தொகுப்பாக வெளிவந்தது பால்வீதி.மிகப்பெரிய வரவேற்பைப்பெற்ற அந்த புத்தகம்,தமிழில்க்கியத்தின் மற்றுமோர் பரிமாணமாய் ஒளிர்ந்தது.

அந்த காலகட்டம் புதுக்கவிஞர்களும் மரபுக்கவிஞர்களும் போரிட்டுக்கொண்டிருந்த தருணம்.மேத்தா,வாலி,வைரமுத்து,இன்குலாப் ஆகியோருடன் அந்த போர்க்களத்தில் இரகுமானும் புதுக்கவிதை வாள் வீசினார்.அந்த renaissance-க்கு பிறகு தான் தன் கவிதைகளின் பால் தமிழ் நெஞ்சங்களை ஆண்டார் அப்துல் இரகுமான்.

இரகுமான் வாணியம்பாடி கல்லூரியில் பேராசிரியராக இருந்த சமயம் பற்பல ஆய்வுகள் நிகழ்த்தினார்.அவற்றுள் "புதுக்கவிதையில் குறியீடு" என்ற ஆய்வு அவருக்கு டாக்டர் பட்டத்தை அளித்தது.தொடர்ந்து சர்ரியலிசம் என்ற தலைப்பிலும் அவரது ஆய்வுகள் இருந்தன.ஆங்கிலக்கவிஞர்களான ஷெல்லி,கலீல் ஜிப்ரான் ஆகியோர் இவரது விருப்பத்துக்குரியவர்கள்.தீவிர இசுலாமியரான இவர்,தன் உரைகளில் தவறாமல் நபிகளின் மொழியொன்றை சமர்ப்பிப்பார்.குறிப்பாக தமிழில் யாராலும் தீண்டப்படாத சூஃபி கருத்துக்களும்,ஜென் தத்துவங்களும்,சீன மதபோதனைகளும் கவிக்கோவால் தமிழுக்கு பெயர்க்கப்பட்டன.அது மட்டுமின்றி உபனிஷதமும்,நான்மறையையும் கூட கற்றவர் ரகுமான்.கல்லூரியிலேயே சங்கத்தமிழை படித்துவிட்டிருந்தார்.அனைத்து கவி வடிவங்களையும் பரீட்சார்த்த முயற்சியில் பயின்றும் வைத்திருந்த ரகுமான் உண்மையிலேயே தமிழை சுவாசித்தவர்.

பேராசிரியராக இருந்தபோதே தன் மாணவர்களிடையே வகுப்புகளினூடே கவிராத்திரி என்ற பெயரில் தமிழை மாணவர்களுக்கும் பருகினார்.அவரே கவியரங்குகளில் பங்கேற்கவும் செய்தார்.ஒருமுறை கலைஞர் கருணாநிதி தலைமையேற்ற அரங்கத்தில் வாசித்த கவிதை கருணாநிதியை கவர,அதன் பின் கலைஞரின் அனைத்து அரங்குகளுக்கும்,அன்னாரிடமிருந்து கவிக்கோவுக்கு அழைப்பு போயிற்று.மெல்ல கழகக்கவிஞராகவே இரகுமான் அறியப்பட்டாலும்கூட தன் தனித்த்ன்மையை அவர் இழந்துவிடவில்லை.அதுவே இன்றுவரை அவர் ஒழுகி வரும் இன்பம் கலந்த மாண்பு.

இரகுமானின் சேவையை பாராட்டி அவருக்கு தமிழன்னை விருது வழங்கப்பெற்றது.மேலும் கவிஞர் விருதாக 1 இலட்சம் ரொக்கமும் தரப்பெற்றது.மேலும் இந்தியாவின் மிக உயரிய இலக்கிய அங்கீகாரமான சாகித்ய அகாதமியும் வழங்கப்பெற்றது.இத்துணை ஆண்டுகளாக இலக்கிய சேவை புரிந்துகொண்டிருந்த அப்துல் இரகுமான் ஓர் இலக்கிய இதழ் ஆரம்பித்தார்.அதன் பெயர் பித்தன்.அதில் அவர் இயற்றிய ஹைக்கூ ஒன்று.

"புத்தகங்களே
சமர்த்தாய் இருங்கள்
பிள்ளைகளை கிழித்துவிடாதீர்கள்"

இந்த ஒரு படைப்பின் மூலமாக அவரது மொழிப்புலமையும்,மேதமையும் விளங்கும்.மெய்யில் பிள்ளைகளும் புத்தகங்களும் இடம் மாறி இருக்கவேண்டும்,ஆனால் அதை நிரல்நிரை மாற்றி ஒரு அற்புதமான கருத்தினை வெறும் இயல்பான சொற்கள் கொண்டு விளக்கியிருப்பது மேதமை தானே?கவிக்கோ இன்றைய தமிழிலக்கிஅப் பரப்பில் கவிதைகளின் நவீனத்துவதிற்கான அடிகோல் என்றால் அது மிகையல்ல.ஏனென்றால் அவர் தன் கவிதைகளில் கருத்தாழமும்,இயல்பும் ஒளித்து வைத்திருந்தார்.

கவியரசு கண்ணதாசனே இரகுமானை தென்னகத்து கலீல் ஜிப்ரான் என்று அழைக்குமளவு தன்னகத்தே இருந்த திறமையை அடக்கமாக எழுத்துக்களால் மெய்ப்பித்திருக்கிறார்.தன்னுடைய சுதந்திரத்தை பறித்துவிடக்கூடும் என்று அஞ்சி அவர் திரையுலகின் பக்கம் தலை வைத்து படுக்கவில்லை.எனினும் தமிழ் வாழும் வரை இரகுமான் வாழ்வார்,

அவரது எழுத்துகளின் சாட்சியாக.

நன்றி வலைப் பூ நண்பர்

2 comments:

Suba Speaks.. said...

AMAZING !!!

Suba Speaks.. said...
This comment has been removed by the author.