Friday, March 23, 2007

தொலைந்து போனவர்கள் - அப்துல் ரகுமான்

தொலைந்து போனவர்கள் - அப்துல் ரகுமான்

விடிந்ததென்பாய் நீ அனுதினமும் - வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை - இங்கு
முடிதல் என்பது எதற்குமில்ல

மணந்தேன் என்பாய் சடங்குகளும் - வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால் - உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.

கற்றேன் என்பாய் கற்றாயா? - வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? - வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்

குளித்தேன் என்பாய் யுகயுகமாய் - நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே - நீ
அளித்த தெதுவும் உனதல்

உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் - வெறும்
உடலுக் கணிவது உடையல்ல
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் - ஒரு
வினாவாய் நீயே நிற்கின்றாய

தின்றேன் என்பாய் அணுஅணுவாய் - உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பர் மனிதரெல்லாம் - பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார

ஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய் - உன்
அசலைச் சந்தையில் விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் - உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய

‘நான்’ என்பாய் அது நீயில்லை - வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்
‘ஏன்’? என்பாய் இது கேள்வியில்லை - அந்த
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு?
- அப்துல் ரகுமான் (தொகுப்பு - சுட்டுவிரல்)

No comments: